Saturday, 22 August 2015

ஓக கலை

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான
பிற மொழிப் பெயர்கள் பட்டியல்
இயற்கை - NATURE
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்
1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமசுகாரம் - SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் - SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE
4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS
6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE
விலங்கு - CREATURES
நீர் உயிரிகள் - AQUATICS
12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE
13. மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE
14. சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE
15. முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன - REPTILES
19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE
நடப்பன - VERTEBRATE
21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE
22. ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE
23. பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE
27. அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE
30. நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE
பறப்பன - AVES & INSECTS
31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE
34. புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE
39. சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE
நடனம் - DANCE
42. நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA
43. களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE
1முத்திரை - GESTURE
46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE
47. பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE
48. படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE
கருவிகள் - TOOLS
51. நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE
52. அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE
53. சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE
தொழில் - ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE
62. வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY
68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE
85. பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED
86. தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE
தூய்மை - CLEANSING
87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் - பிராணாயாமம் - ORDER OF BREATH
91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH
93. சீழ்க்கை - சீத்காரி - WHISTLING
94. நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE
96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING
99. கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED TEETH
101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING
102. வெளி மூச்சு - விலோமம் - EXHALING
103. தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX
நிறைவு நிலை - PACIFICATION
104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE
105.. அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE

Sunday, 22 March 2015

இது தமிழர்

முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்களில் உருவான பல அரிய தமிழ்க்கலை நூல்களை தின்றழித்த தாமிரபரணியின் கரையில்தான் இந்த தமிழ்ப்புரட்சியும் நடந்து வருகிறது. காடாகக் கிடந்த 120 ஏக்கர் பரப்பை செதுக்கிச் செப்பனிட்டு, ‘தமிழூர்’ என்ற ஒரு கிராமத்தையே நிர்மாணித்திருக்கிறார் ச.வே.சு என்று அன்பாக அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன். தமிழின் தொன்மத்தை நிறுவும் பல்வேறு ஆராய்ச்சிகள் தமிழூரில் நடந்து வருகின்றன. 25 ஆயிரம் அரிய நூல்களைக் கொண்ட மூன்று நூலகங்கள் எந்நேரமும் ஆய்வு மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.
முழங்காலுக்கு மேலான வேட்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு... டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஏதுமறியாத கிராமத்துப் பெரியவரைப் போல காட்சியளிக்கிறார் ச.வே.சு. ‘தமிழ்ப்பழம்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், கேரள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணி செய்ய ஆரம்பித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனராக உயர்ந்தவர். ‘‘ச.வே.சு சிலப்பதிகாரம் நடத்தினால் வகுப்பறை முழுவதும் தமிழும் இசையும் ததும்பி நிற்கும்’’ என்கிறார்கள் அவரது மாணவர்கள்.

ஓய்வுக்குப் பிறகு, தம் சொந்த ஊருக்கு அருகிலேயே தமிழூரை நிர்மாணித்து, சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய உரைகள் என எந்நேரமும் தமிழும், இலக்கியமுமாகவே வாழ்கிறார். 84 வயதான இவரது பணியை மெச்சி, சாகித்ய அகாடமியின் பாஷா சன்மான் உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

‘‘இது எனது நெடுநாள் கனவு. உலகில் வேறெந்த சமூகத்துக்கும் தம் மொழியின் பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்க தயங்குகிறார்கள். சங்க இலக்கியங்கள்தான் நம் மொழியின் செழுமைக்கும், தொன்மைக்கும் சான்று. அதை சர்வதேச தளத்தில் நிறுவுவதற்கான ஆய்வுகள், ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. நிறைய வரலாறு பதிவு செய்யப்படாமல் கிடக்கிறது’’ என்று வருந்துகிற ச.வே.சு, இதுவரை 170 நூல்களை எழுதியிருக்கிறார்.

ஆலங்குளத்துக்கும் தென்காசிக்கும் இடையில், பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது தமிழூர். அரசுப்பதிவேடுகளும் இப்பெயரை அங்கீகரித்துள்ளன. ச.வே.சு இங்கு வரும்முன்பு, அத்தியூத்து கிராமத்தின் ஒரு அங்கமாக இப்பகுதி இருந்தது. 1985ல் இந்த இடத்தை வாங்கிய ச.வே.சு, இதை ஒரு கல்வி கிராமமாக மாற்றும் எண்ணத்தில் 35 ஏக்கர் நிலத்தை ஒரு பொறியியல் கல்லூரிக்குக் கொடுத்தார். அருகில் ஒரு வேளாண்மைக் கல்லூரியையும் தொடங்கினார். தென்னந்தோப்பு, மாந்தோப்புகளை உருவாக்கினார். உலகத்தமிழ் கல்வி இயக்கம் என்ற அமைப்பு தொடங்கி, சர்வதேச அளவில் தமிழ் பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை ஒருங்கிணைத்தார். குடியிருப்புகளையும் உருவாக்கினார். தற்போது வேளாண் கல்லூரி செயல்படவில்லை. குடியிருப்புகளில் ஆய்வு மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஊரின் நடுவில் தனக்கென ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறார். வீட்டின் பெயர் தமிழகம்.


‘‘தமிழ்ல இருக்கிற பழமையான இலக்கியங்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை என்னைப் போன்றவங்களுக்கு இருக்கு. இலக்கியங்கள்தான் நமக்கு சொத்து. ஆனால், மொழி மேம்பாட்டுக்கான ஆதரவும் இங்கே குறைவா இருக்கு. அந்தக்காலத்தில் தமிழ்ப்பணிக்காக பெரும் செல்வங்களைக்கூட இழந்தவர்கள் இருந்தார்கள். எங்கள் வீரகேரளம்புதூரை உள்ளடக்கிய ஊத்துமலை ஜமீன் இருதாலய மருதப்பர், 37 கவிஞர்களைக் கொண்டு ஊத்துமலை பிரபந்த திரட்டு ஒன்றை உருவாக்கினார். அந்தத் திரட்டின் ஒரு பிரதியை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். காவடிச்சிந்து இயற்றிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற பலரை அரவணைத்துப் பாதுகாத்தார் மருதப்பர். நெல்லைக்கு வந்த உ.வே.சாமி நாதய்யருக்கு ஒரு மாட்டுவண்டி நிறைய ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அதில்தான் பத்துப்பாட்டும், குறுந்தொகையும் கிடைத்தன. மருதப்பரைப் பற்றி படித்தபிறகுதான் தமிழில் எனக்கு ஈடுபாடு வந்தது.

எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் கையில் இந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும். மாதம்தோறும் ஏதேனும் ஒரு கருத்துருவை முன் வைத்து கருத்தரங்கங்களை நடத்துகிறேன். சிறந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து பரிசு வழங்குகிறேன். இப்பணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது’’ என்கிற ச.வே.சுவின் துணைவியார் பார்வதி அம்மாள். 2 மகன்கள். மூத்தவர், பள்ளி ஆசிரியர். இளையவர், கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர்.

தற்போது ‘தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்’ என்ற உண்மையை நிறுவும் ஆய்வுகளில் தீவிரமாக முனைந்திருக்கிறார் இவர். தவிர, ‘தமிழ்மரபுச் செல்வம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, தொல்காப்பியர் தொடங்கி வாலி வரையிலான தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் தமிழூரில் தீவிரமாக நடந்து வருகின்றன.

Sunday, 28 December 2014

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்

(விழுப்புரம் இலக்கியக்கூடலில் நூல் அறிமுக உரை)

1.1. இயல்பு
பிறப்பு என்பது ஒரு நேர்ச்சி – விபத்து - போன்றது ‘Birth is an accident” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான பகுதியில், விருப்பமான மக்கள் கூட்டத்தில் பிறக்கின்ற வாயப்பைப் பெற்றிருக்கவில்லை. பிறந்தபின், தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் பற்றுள்ளவராக இருப்பதென்பது இயல்பானதே!
‘காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு’ என்பது போல அவரவருக்கும் அவரவருடைய இனம், அவரவர்களின் மொழி -உயர்ந்தது; சிறந்தது; பெருமை மிக்கது தான்! இருந்தபோதிலும், தமிழர்கள் வரலாறு தொடர்பாகவும், தமிழின் வரலாறு தொடர்பாகவும் கூறப்பட்டு வருகின்ற ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் வியப்பும் பெருமிதமும் அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன.

1.2.. குமரிக்கண்டம்
இப்போதிருக்கும் இந்திய தேசப்படத்தில் கன்னியாக்குமரி முனைக்குக் கீழே நாம் பார்க்கும் – அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல், இந்துமாக்கடல் – ஆகிய மூன்றுகடல்களின் கூடலாகக் காணப்படும் கடல் பகுதி ஒருகாலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
அதாவது இலட்சத் தீவுகள், அந்தமான் நக்காவரம் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா சேர்ந்த இப்போதிருக்கும் கன்னியாகுமரியின் தென்பகுதி முழு நிலப்பகுதியாக இருந்தது;
அப்பெரு நிலப்பரப்பைத் தமிழர், ‘குமரிக்கண்டம்’ என்றனர். குமரியாறு, பஃறுளியாறு, குமரிமலை போன்றவை அப்பகுதியில் இருந்தன.
உயிரியல் ஆய்வாளர்கள் அதை ‘இலெமூரியாக் கண்டம்’ என்கின்றனர். நிலத்தியல் ஆய்வாளர்களோ அதனைக் ‘கோண்டுவானாக் கண்டம்’ என்கிறார்கள்.

1.3. மேற்குலக அறிஞர் உறுதிப்படுத்தல்
ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அந்தக் குமரிக்கண்ட பெருநிலப் பகுதியிலேயே முதன் முதலாக மக்களினம் தோன்றியது என்பது ஆய்வாளர் கருத்தாக இருந்து வருகின்றது.
இதனை உறுதி செய்த மேற்குலக அறிஞர்கள் பலராவர். அவர்களுள், Sir John Evans, Prof. Hacckal, Sir Walter Ralegh, Sir T.W.Holderness, Dr.Macclean., Dr.heezer, Sir John Simmons போன்றோர் குறிப்பிடத் தக்கவராவர்.
சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் கோந்தரதோவ் எழுதிய “The Riddles of Three Oceans” என்ற நூல், தமிழிலே “இந்துமாக்கடல் மர்மங்கள்” என்ற பெயரில் பார்த்தசாரதி என்பாரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. NCBH வெளியீடு, அந்நூல் குமரிக்கண்ட உண்மையை உறுதி செய்கின்றது.

1.4. இலக்கியச் சான்றுகள்
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என வரும் சிலப்பதிகார வரிகளும், “நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என்ற புறநானூற்று வரியும் இன்னும் சில இலக்கியச் சான்றுகளும் குமரிக்கண்ட உண்மையை மெய்ப்பிக்கின்றது.
(உறையூரை அடைந்த கோவலன் கண்ணகி கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கு தங்கி வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றனர். ஒரு இளமரக்காவுட் புக்கனர். அப்போது பாண்டியனின் பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்திருந்த மறையோன்...
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! .... என்றும் பாடுகின்றான்!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புறநானூறு 9ஆம் பாடலில்,

எம்கோ வாழிய குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின், நெடியோன்
நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! ... என்றும் பாடுகின்றார்)

இக் குமரிக்கண்டக் கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்தி கேயனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரையார், அறிஞர் கா.சுப்பிரமணியனார், அறிஞர் பூரணலிங்கனார் போன்ற தமிழ்நாட்டறிஞரும் ஏற்று உறுதிப் படுத்துகின்றனர்.

1.5. முதன்மொழி
ஓரிரு அறிஞர்கள் இவ் உண்மையை ஏற்கத் தயங்கினும், இக்கால் இலக்கியச் சான்றுகள், சொல்லாய்வுகள் போன்ற அகச்சான்றுகளும், கல்வெட்டு, தொன்மையான ஓவியங்கள், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு போலும் தொல்லியல் சான்றுகள் உள்ளிட்ட அறிவியற் கூறுகளாகிய புறச்சான்றுகளும் இதை உறுதிப் படுத்தி வருகின்றன. பேராசிரியர் மருதநாயகம், நாளுக்கு நாள், உலக ஆய்வறிஞர்களின் முடிவுகள் குமரிக்கண்ட உண்மையை வலியுறுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றார்.
கடற்கோள்களால் அழிந்த அந்தக் குமரிக்கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய மாந்தர் பேசிய முதல்மொழியே தமிழ்மொழி என்பது வரலாற்று அறிஞரும் மொழியியல் வல்லாரும் கூறும் கருத்தாகும்
பி.டி.சீனுவாச ஐயங்காரின் ‘இந்தியக் கற்காலம்’ “The stone age of India” என்ற ஆங்கில நூலும், ‘தமிழர் வரலாறு’ “The History of Tamils” என்ற ஆங்கில நூலும் இதை உறுதிப்படுத்துகின்றன.

1.6. தொல்காப்பியம்
இவையிருக்க, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பண்டைத்தமிழ் நூல்களுள் பழமையானது, காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலாகும். இதன் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்று பாவாணரும், அறிஞர் இலக்குவனாரும் இன்னும் பலரும் தீர்மானமாகக் கூறினர். இக்கால் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ஆய்வாளரும் அதனை உறுதி செய்துள்ளனர்.
ஆகவே, 2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், அறிஞர் இன்னவாறு கூறுவர், இவ்வாறு கருதுவர் என்று விளக்கும் முறையில், என்ப, மொழிப, கூறுப, சொல்லினர், மொழியினர், என்மனார், என்றிசின், என்றிசினோரே, என்றவாறு பல இடங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்தில், தொல்காப்பியம், எழுத்தெனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப – என்று கூறுகிறது. இவ்வாறு, தொல்காப்பியத்தில் 287 இடங்கள் சுட்டப் படுகின்றன.

1.7. முன்னிருந்த நூல்கள்
இவை ஓர் உண்மையைச் சொல்கின்றன. தொல்காப்பியத்திற்கு முன்னராகவே பல்வேறு இலக்கியங்களும் கலை நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்ற உண்மையைத் தான் அவை கூறாமல் கூறுகின்றன; உணர்த்துகின்றன.

1.8. மரபு
இன்னொன்று! தொல்பழங் காலந் தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும், நெறிகள் வழுவாது ஒழுகும் முறைமையை, ‘மரபு’ என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
நெறிகள் என்றால், ‘கொள்ளுவன கொண்டு, தவிர்ப்பன தவிர்த்தல்’, ‘காப்பன காத்து கடிவன கடிதல்’ அறிவார்ந்த பெரியோர் ‘விதித்தன செய்தலும் விலக்கியன தவிர்த்தலும்’ ஆகும். இப்படிப்பட்ட நெறிகளைத் தொன்று தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதே மரபு என்று சொல்லப்படுகின்றது.
தொல்காப்பியத்தில் மரபு என்ற சொல்லாட்சி 86 இடங்களில் காணப்படுகின்றது. தொல்காப்பிய உட்பிரிவான இயல்கள் சிலவற்றின் பெயர்களே நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்றுள்ளன.
தொல்காப்பியத்தில் சுட்டப்படும் பல்வேறு மரபு நிலைகள், கடைப்பிடித்துவரும் பல்வேறு முறைமைகளை மட்டும் சுட்டவில்லை. ‘தொன்று தொட்டுத்தொடர்ந்து கடைப்பிடித்து வருதல்’ – என்பதால் வேறொன்றையும் தொல்காப்பியம் நமக்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கின்றது! என்ன அது? எண்ணிப் பாருங்கள்!
தொல்காப்பியத்திற்கும் முன்னரே ஒரு பெரும் நீண்ட அறிவுக்காலம் இருந்திருப்பதையும் அல்லவா அவை கூறாமல் கூறுகின்றன?
தமிழ்மொழி, பலதுறை நூல்கள் நிறைந்த மொழியாய் நுட்பச் சிறப்போடும் வளச் செழுமையோடும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களெல்லாம் என்னவாயின?

1.9. அழிந்தவகை
பாவாணரும் பரிதிமாற் கலைஞரும் விடைகூறுகின்றனர். இடைக்காலத் தமிழரின் பேதைமையால், பாழான மண்ணிற்கும் படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்துணை எத்துணையோ எனப் பாவாணர் பதைபதைப்பார்.
பரிதிமாற் கலைஞரென்னும் சூரிய நாராயண சாத்திரியார், ‘தமிழ்மொழியின் வரலாறு’ (மொழிநூல்) என்ற பெயரிலான அவருடைய நூலில் கூறுவதைக்கேளுங்கள்: ‘தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்’ என்பார்.
அவரே, “தமிழர்களின் மறைநூல் மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு, மூல நூல்களை அழித்துவிட்டு வடமொழியனின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினர் பிராம்மணர்” என்று எழுதியுள்ளார். இவற்றிற்குள் இதற்குமேல் இப்போது போகவேண்டாம்!

1.10. அறிவியல் சார்ந்த மெய்ப்பிப்பு
மேற் கூறிய செய்திகளால், தமிழ்மொழியின் முன்மையையும் தொன்மையையும் அறியமுடிகிறது
தொல்காப்பிய காலத்திற்கும் முன்னரே ஓர் உயர்ந்த நிலையில் அறிவார்ந்த செழுமைமிக்க வளஞ்சான்ற மொழியாகத் தமிழ்மொழி இருந்ததைப் பல்வேறு இலக்கியச் சான்றுகளாலும், அறிஞர் ஆய்வுரைகளாலும், தொல்லியல் ஆய்வு முடிவுகளாலும் அறிவியல் அடிப்படையில் அறிகிறோம்.

2.1. தமிழலங்காரம்
சரி. இவற்றிற்கும் தமிழலங்காரத்திற்கும் தொடர்புண்டா? உண்டு!
தமிழலங்காரமும், தமிழின் உயர்வையும் முன்மையையும் தொன்மையையும் பெருமையையும் சிறப்புகளையும் நுட்பங்களையும் பலவாறாகப் போற்றிக் கூறுகின்றது.
வடமொழியால், வடமொழியாளரால் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற தாக்கத்தையும் கேட்டையும் கூறுகின்றது. வடமொழியைவிடத் தமிழ் எங்ஙனம் மேம்பட்டதாகும் என எடுத்துக் கூறுகின்றது.
ஆனால், அங்ஙனம் மேன்மையைக் கூற வேறுபட்ட கோணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே வேறுபாடாகும்.

2.2. தமிழலங்காரம் பிறந்த கதை
தமிழலங்காரம் சிறிய நூல். இதில் காப்புச் செய்யுளும் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் உள்ளன. இந்நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாராவார்.
இவர், தேவார மூவர் – திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் - போல பல ஊர்களுக்கும் சென்று, ஆங்காங்கு கோயில்கொண்ட சிவனைப் போற்றிப் பதிகம் பாடி வந்தார். அவ்வாறான நிலையில் ஒருமுறை வேலூரில் வந்து தங்கி அவ்வூர் உறையும் இறைவனைப் போற்றிப் பதிகமும், திருப்புகழும் பாடியிருந்தார்.
அக்கால், அவரைத்தேடி வந்த ஒரு பனவன் – பனவன் என்றால் பார்ப்பனன், பிராமணன் என்று பொருள் – அவரிடம் வடமொழியே உயர்ந்தது; வலிமை பெற்றது எனத் தருக்குரை செய்ய, இருவரும் பல்வேறு நிலைகளில் சொற்போர் புரிந்தும் முடிவுபெறாத நிலையில், சீட்டெழுதிப் போட்டு முருகப் பெருமானிடம் தீர்ப்பறிய முடிவு செய்தனர்.
அம்முடிவின் படியே முருகனின் திருஉருவின் முன் சீட்டெழுதிப் போட்டு ஒரு சிறு பெண்குழந்தையை விட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்லினர். அக்குழந்தை எடுத்த சீட்டில், ‘தமிழே உயர்ச்சி’ என்று இருந்தது. இந் நிகழ்ச்சியே, தாம் தமிழலங்காரம் பாடக் காரணமாக இருந்தது என்று ‘குருபர தத்துவம்’ என்ற தன்வரலாற்று நூலில் நூலாசிரியர் குறித்துள்ளார்.

2.3. நூலாசிரியர்
‘தமிழலங்காரம்’ இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தந்தை, திருநெல்வேலி நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில் நாயகம் ஆவார். தாய் பேச்சிமுத்து அம்மையார். இவர் 1839 -இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.


2.4. பாப் பொழியும் ஆற்றல்
எட்டு அகவையிலேயே சுரண்டை என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ‘பூமிகாத்தாள்’ எனும் பெண் தெய்வத்தின் பெயரில் இவர் முதன்முதலாக ஒரு வெண்பா பாடினார்.
பதின்மூன்றாம் அகவையிலேயே ‘வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததார். இவ்வாறு இளமையிலேயே பாடல் பொழியும் ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராமனார் என்பார், இவருக்கு "ஓயா மாரி" என்ற பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
(வண்ணப் பா: முத்தைத்திரு பத்தித்திருநகை
அத்திக்கிரு சக்திச்சரவண.................................. என ஓதும்)
2.5. பெயர்க் காரணம்
‘சரபம்’ எனபது ஒரு புனைவான, ‘கற்பனை’யான எட்டுக்கால்களை உடைய பெரும் பறவை. இது பனிமலையில் வாழ்வதாகவும், சீயம், அரிமா என்னும் விலங்கரசான ‘சிங்க’த்தையும் தாக்கக் கூடியதென்றும் கூறுவர்.
இப் புனைவுப் பறவையைத் தமிழில் ‘சிம்புள்’ என்பர். ‘சிம்புட் பறவையே, சிறகை விரி, எழு!’ என்பது பாவேந்தரின் புகழ் பெற்ற பாடல் வரி!.
வண்ணம் என்றால் சந்தம். வண்ணப்பா இயற்றும் ஆற்றலில், அந்தப் பறவைக்கு இருந்த உடல் ஆற்றலை ஒத்த ஆற்றல் அவருக் கிருந்ததால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்பட்டார். வெண்பா எழுதுவதில் திறம் மிக்கவரை ‘வெண்பாப் புலி’ என்று சொல்வார்கள். அதைப் போன்றே அடிகளார் ‘வண்ணச்சரபம் என்றழைக்கப்பட்டார். (12 வண்ணங்கள் பாடியுள்ளார்)
(சரபம்: A large fabnulous bird with 8 legs regarded as the foe of the lion and as inhibiting the snowy mountains. – வின்சுலோ அகராதி)
உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டு இடுப்பில் நீர்ச்சீலை என்னும் கோவணமும், கையில் தண்டமும் வைத்துக்கொண் டிருந்ததால் தண்டபாணி அடிகள் என்றும், முருகனை மனம் உருகிப் பாடியதால், "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். அருணகிரியாரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘திருப்புகழ் அடிகள்’ என்றும் அழைக்கப்பட்டார்.

2.6. இயற்றிய நூல்கள் திருவரங்கத் திருவாயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, பெருமாளந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள், புலவர் புராணம், திருமாவாத்தூர் தலபுராணம், அருணகிரிநாதர் புராணம், முசுகுந்த நாடகம், மறுநெறித் திருநூல், நான்குநூல், கௌமார முறைமை, தியானாநுபூதி ஆகிய நூல்களையும்,
சத்திய வாகசம் என்னும் உரைநடை நூலையும்,
அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய இலக்கண நூல்களையும்,
தமிழைப் போற்றி வணங்கும் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார்.
ஆங்கிலேயரை எதிர்த்து ‘ஆங்கிலியர் அந்தாதி’ என்ற நூலையும் இன்னும் பலநூல்களையும் அடிகள் இயற்றியுள்ளார்.

2.7. தமிழிசைத் தொண்டர் தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரி முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடிவந்த காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் தமிழில் வண்ணம் (சந்தப்பாட்டு) பாடித் தமிழிசைக்கு உயிரூட்டினார்.
சந்த வகைக்கு இலக்கணம் வகுத்து ‘வண்ணத்தியல்பு’ என்ற இலக்கண நூலை முதன்முதலாக இயற்றிவர் இவரே!. இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு நூறாயிரத்திற்கும் – ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவையாம்.

2.8. அடிகளும் ஆமாத்தூரும்
பல ஊர்களுக்கும் சென்று பதிகமும் திருப்புகழும் பாடிவந்த அடிகள், தம் இறுதிக் காலத்தில் நம் விழுப்புரம் நகருக்கு அருகிலுள்ள திருஆமாத்தூர் வந்துத் தங்கிக் கெளமார மடத்தை நிறுவித் தமிழ்ப்பணி யாற்றி யிருக்கிறார்.
அடிகளின் பெயரர் முருகதாசர் எழுதிய உரையுடன், தமிழலங்காரம் 1964-இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 34 ஆண்டுகள் கடந்தபின், நம் விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் தலைவர் மருத்துவர் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, தமிழலங்காரம் நூலை உரையுடன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல் மீண்டும் அச்சேற்றி வெளியிட்டார்.
3.1. தமிழலங்காரம் தமிழின் உயர்வை எவ்வாறு விளக்குகிறது?
தமிழலங்காரம், பல்வேறு தெய்வியக் கதைகள், கடவுளரின் வாழ்க்கை. நிகழ்வுகள், நம்பிக்கைகள், இலக்கண இலக்கிய சிறப்புகள் துணையுடன் தமிழின் உயர்வை, பெருமைகளை, சிறப்புகளை, நுட்பங்களை விளக்கிக் கூறுகிறது.

3.2. தமிழலங்கார விளக்கங்களில் யார்யார் தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன?
சிவபெருமான், திருமால், பிரமன், இந்திரன், பிள்ளையார், முருகன், கலைமகள், திருமகள், சூரியர், சந்திரர் போன்ற கடவுளர் தொடர்பான பல செய்திகளும்
விருத்திராசூரன், சூரபன்மன். இராவணன் தொடர்பான செய்திகளும்,
சனகன், வசிட்டர், திருமலை ராயன், கணிவண்ணன், ஆண்டாள், பரவை நாச்சியார், தொடர்பான செய்திகளும்,
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், கச்சியப்ப சிவாசாரியார், ஒட்டக்கூத்தர், அம்பிகாபதி, இரட்டைப் புலவர், அகத்தியர், நக்கீரர், காளமேகம், முத்துவயிரப் புலவர், கந்தசாமிப் புலவர், வீரபாண்டியப் புலவர், சீநிவாசப் பெலவர், ஆறுமுகப் புலவர், பாணினி, தக்கன் தொடர்பான செய்திகளும்,
பகழிக் கூத்தர், பட்டினத்தடிகள், பத்திரகிரியார், பராசரமுனிவர், திருஞான சம்பந்தர், சுந்தர மூர்த்தியார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், குகை நமச்சிவாயர், அபிராமிபட்டர், வியாசர், சேரமான் பெருமாள் நாயனார், திருப்பாணாழ்வார், வீரபாகு, திருமங்கை யாழ்வார், இன்னும் சிலர் தொடர்பான செய்திகளும் தமிழின் உயர்வைக் கூறுவதற்கு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

3.3. தமிழலங்காரம் சுட்டும் நிகழ்வுகள், நம்பிக்கைகளில் சில
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது,
இறைவனின் திருமணத்திற்கு அனைவரும் இமயத்தில் குவிந்ததால் இமயம் தாழ, அதைச் சரிசெய்வதற்குச் சிவன் அகத்தியரைப் பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தது,
சுந்தரர், வறண்ட குளத்தில் நீர் வரவழைத்து, அதில் முதலை தோன்றச் செய்து, மூன்றாண்டுக்கு முன் அது விழுங்கிய பார்ப்பனச் சிறுவனை உரிய வளர்ச்சியுடன் உமிழச் செய்தது,
திருஞான சம்பந்தருக்கு உமை ஞானப்பால் ஊட்டியது,
திருஞானசம்பந்தர், மயிலாப்பூர் குளக்கரையில் சுடப்பட்ட எலும்பிலிருந்து பெண்வரப் பாடியது,
திருநாவுக்கரசர் கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது, கொல்லவந்த பட்டத்து யானையைப் பின்வாங்கச் செய்த்து, நீற்றறயைக் குளிரவைத்தது, இறந்த அப்பூதியார் மகனை உயிர்பெற்று எழச் செய்த்து,
தருமி பாண்டியனிடம் பொற்கிழி பெறச் செய்தது,
ஒளவையார், வெட்டப் பட்ட பலாமரம் தழைக்கப் பாடியது.
சுந்தரர்க்காகப் பரவைநாச்சியிடம் சிவன் தூது சென்றது,
அபிராம பட்டரைக் காப்பாற்றக் காருவா நாளில் அமாவாசையில் முழுநிலா தொன்றச்செய்தது - போன்ற பலப்பல கதைகளும், நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் தமிழின் உயர்வைக் கூற வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் தமிழலங்காரத்தில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

4.1. தமிழலங்காரப் பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலில் காப்புச் செய்யுள்:
தித்திக்கும் நூறு தமிழலங்காரப் பாடல்களை நன்றாகத் தாம் பாடுவதற்குப் பிள்ளையார் துணையிருக்க வேண்டுமென வேண்டுகிறார் வண்ணச்சரபம் அடிகளார். அக்காப்புச் செய்யுள் இதுதான்:
இமிழ லங்கார மதநீர் அருவிகள் எப்பொழுதுதும்
உமிழ லங்காரத் தலைக்கண நாதனை உன்னுகின்றேன்
சிமி ழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம்
தமிழ லங்காரக் கவிநூறும் நன்கு தருவதற்கே!
மங்கையரின் இன்மொழியினும் தித்திப்பது தமிழ்மொழி என்கிறார். இந்தக் கருத்து, ‘மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்று சொல்வேன்’ என்ற பாவேந்தரின் கூற்றை நினைவூட்டுகிறது அல்லவா?

4.2. ஆரிய வேள்வியில் உயிர்க் கொலை
பிரம்மன், தக்கன் போன்ற வடமொழியாளர், ஆரிய வேத்ததில் ஆ என்னும் பசு, ஆடு, குதிரை முதலியவற்றைக் கொன்று செய்யும் வேள்வியைப் பாராட்டிக் கூறுவர்.
ஆனால், திருவள்ளுவர் ஒளவையார் முதலானவர் கூறிய தமிழ்மறையோ கொலை எவ்விடத்தும் கூடாது என்று வலியுறுத்துவதால் உயர்ந்தமொழி தமிழே என்று வண்ணச்சரபம் ஐயா வலியுறுத்துகிறார். பாடல் இதோ:
நான்முகன் தக்கன் முதலோர் அநேகர் நவின்றவட
நூன்முழு தும்கொலை வேள்வியைப் போற்றும் நுடங்கரிய
வேன்முனைக் கண்ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்டதென்னூல்
ஊன்முழுப் பாவம் எனவே அடிக்கடி ஓதிடுமே! - 4
(‘மனோன்மணீயம்’ சுந்தரனாரும், ‘மணிமேகலை’ ஆபுத்திரனும் நினைவுக்கு வருகின்றனர் அன்றோ?)

4.3 தென்றலும் வாடையும்
தண்மையுடன் தமிழின் இனிமை சேர்ந்துவரும் தென்றல் காற்று உடலுக்கு நலத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் தரும்.
கடினமான வடமொழித் தன்மை தாங்கிவரும் வாடைக்காற்று உடலுக்கு அயர்வும் கேடும் தரும்.
இவற்றை ஆராய்ந்து மருத்துவநூல் வல்லாரே கூறுவர் என்று தமிழின் உயர்வைக் கூறுகிறார். பாடல் இது:
தண்டமிழ் வாசம் கலந்து குலாவும் தனித்தென்றலும்
ஒண்டகை ஆரியச் சீர்தோயும் வாடையும் ஊனிலொன்றி
மண்டலத் தோர்க்குத் தரும்பயன் தன்னை மதித்தறிந்து
கண்ட வயித்தியர் வாய்மேன்மை தாழ்மையைக் காட்டிடுமே! -10 ‘வாடைக் காற்று தமிழர்க் காகாது’ என்ற வரி நினைவுக்கு வருகின்றது.

4.4. இறைவன் தன்கையால் எழுதிய திருவாசகம்
பராசர முனிவரின் மகனான வியாசர் கூறிய வடமொழியின் ஐந்தாம் மறையாகிய பாரதத்தை மேருமலையின் மீது எழுதும்படி பிள்ளையாரைப் பணித்தார் இறைவன்.
ஆனால், அன்புருவான திருவாதவூரடிகள் பாடிய தென்மொழித் திருவாசகத்தை தம் கையாலேயே எழுதினார்.
அதை உமாதேவி மகிழும்படிப் பொன்னம்பலத்தில் பாதுகாப்பாகவும் வைத்தார் என்று தென்மொழித் தமிழுக்கு இறைவன் அளித்த உயர்வை அடிகள் கூறுகிறார்.
பாடல் இதோ:
வண்மைப் பராசரன் மகன்சொல்ஐந் தாமறை வாசகத்தை
அண்மைப் புதல்வன் கரத்தால் வரைவித்த அண்ணலருள்
உண்மைத் தமிழ்த்திரு வாசகப் பாடல் ஒருங்கெழுதிப்
பெண்மைக் குவகை தருமரங் கூடுறப் பேணினனே! - 17

4.5. எகர ஒகரம் இல்லாத மொழி
சீர்காழி அகன்ற பொய்கைக் கரையில் அழுத சிறுவரான திருஞான சம்பந்தருக்கு உமையவள் ஊட்டிய ஞானப்பாலின் இனிமை, அடியவர் அஞ்ஞான இருள் நீக்கும் தேவாரத் தமிழாக வெளிவந்ததே யல்லாமல்,
எ, ஒ போன்ற எழுத்துக்கள் இல்லாத வடமொழி மூலமாக வெளிவரவில்லை. எனவே, தமிழ் ஞானமொழி எனகிறார் அடிகள்.
அந்தப் பாடல் இதுதான்:
சீகாழி யூர்த்தடம் பொய்கைக் கரையிற் சிறிதழுத
வாகாரும் சேய்க்குமை நல்கிய பாலின் மதுரமன்பர்
சோகாந்த காரம் கெடத்தமி ழோடு துலங்கிற்றன்றி
ஏகாரத் தின்குறில் இல்லாக் கலையொ டிலங்கிற்றன்றே! - 19
தேவாரம் எகர ஒகரமில்லா வடமொழியிலா பிறந்தது? தமிழில்தானே பிறந்தது என்கிறார் வண்ணச்சரப அடிகளார்.

4.6. திரிந்த தமிழ்ச்சொல்
‘புகல்’ என்னும் தமிழ்ச் சொல்லைப் ‘போல்’ என்று இந்தியில் கூறுகின்றனர். இவ்வாறு பல தமிழ்ச் சொற்களை இந்துத்தானியில் திரித்து வழங்குகின்றனர்.
உலகில் எம்மொழியின் சொற்களும், தமிழ்ச்சொல்லும் வடசொல்லும் கலந்தே அமைகின்றன.
எனவே, தமிழே உலக மொழிகளின் தாய் என்கின்றார்.
பாடல் இது:
புகல்எனும் சொல்லினைப் போல்எனச் சொல்லுதல் போற்பலசொல்
இகல்இந்துத் தானியும் செந்தமி ழிற்கொண் டியம்புகின்றார்
அகல்நிலத் துள்ள கலையாவும் தென்சொல் லதுவுமெதிர்
திகழ்வட சொல்லும் கலந்தே விளங்கும் தெரிந்திடினே! - 22

4.7. ஒண்தமிழ் ஆற்றல்
திருநாவுக்கரசரைக் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் வீசினர். அந்தக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது தமிழ்ப்பாடல்.
கொல்ல வந்த பட்டத்து யானையை அஞ்சி அடங்கச் செய்தது தமிழ்ப் பா. சுண்ணாம்புக் காளவாயாகிய நீற்றறையைக் குளிரவைத்தது அப்பரின் தமிழ்ப் பாட்டு.
அப்பருக்கு உணவு பரிமாற இலை கொண்டுவரச் சென்ற போது பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் தலைமகனை உயிர்பெற்றெழச் செய்தது அப்பரின் தமிழ்ப் பதிகம்.
ஒண்டமிழின் ஆற்றல் என்னே! என்று பாடுகிறார்.
கடல்நீரில் கல்மிதக்கும் படிச்செய்து களிறுறுக்கும்
அடல்யாவும் குன்ற அடக்கிவெந் நீற்றறை அம்புயப்பூந்
தடமாகக் காட்டி அரவால் இறந்த தனயனையும்
உடலோ டெழச்செய்த தன்றோ ஒருவன்சொல் ஒண்டமிழே! - 29

4.8. பேய்க்கரும்பு இனிக்கும் பேறு தரும் தமிழ்
திருவாரூரில் காமத்தால் இறந்த ஒருவனைப் பிழைக்கச் செய்தது பட்டினத்தார் தமிழ்ப் பா, இறந்த தாயின் உடலை நீரூறும் வாழை மரங்கொண்டு எரியூட்டியது அவர் தமிழ்ப் பாடல், காஞ்சியில் இகழ்ந்து பேசிய ஒருவனது பெருவயிறு பிளக்கச் செய்ததும் அவர் தமிழ்ப்பாவே, திருவொற்றியூரில் மாடு மேய்க்கும் சிறுவர்க்குப் பேய்க்கரும்பை இனிமை யுடையதாக்கியது (பட்டினத்தார் பாடிய) செந்தமிழே என்கின்றார். அது இந்தப் பாடல்:
ஆரூரில் மொத்துண்டு செத்தார்க் குயிர்நல்கி, அன்னையினால்
நீரூறும் வாழையில் தீமூட்டிக், கச்சியில் நிந்தைசெய்தோன்
பேரூன் வயிறு பிளந்து, கைப்பாகிய பேய்க்கரும்பும்
சீரீர்தென் ஒற்றியில் தித்திக்கச் செய்தது செந்தமிழே! - 53
(முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அளன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூளக மூள்கவே! – பட்டினத்தார் பாடல்)

4.9. தமிழை மற்றொருமொழி தந்ததென்பவன் பதர்!
தமிழை உணர்ந்த பாவலன் போன்ற ஒருவன், தனது மொழியை அமிழ்தினும் உயர்வென்று அறிந்து மகிழாமல், பிறமொழியை விரும்புவது, வேறொரு பெண்ணின் கணவனை வியக்கும் ஒருத்தியின் செயலுக்கு ஒப்பாகும். அவன் புலவனல்லன் என்கிறார். அந்தப்பாடல் இது:
தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன் தனதுகலை
அமிழ்தினும் ஏற்றமென் றேமாப் புறாமல் அயற்கலையால்
உமிழ்வதென் றொப்பிடில் மற்றோர் மடந்தைக் குரியகொண்கன்
குமிழ்மலர் நாசியி னால்மணந் தாள்நிகர் கோதினனே! - 97
இவ்வாறு எல்லாப் பாடல்களும் சுவையோடு தமிழின் உயர்வைத் தெரிவிக்கின்றன.

5.1 தண்டபாணியார் தமிழ்ப்பற்று
"இளநகைச் சிறுமியர் சொல் மொழியினும் தித்தித்திருக்கின்ற தமிழ்" என்றும்,
"செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத் தந்தனன் கந்தன்" என்றும்
"தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற் றிருப்பவன் வெறும் புலவோனே" என்றும்,
”மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட” என்றும்
“தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில், அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே!” (பு. இ.) என்றும்

தண்டபாணி அடிகளார் பாடிய பாடல் வரிகள் அவரின் ஒப்பற்ற தமிழ்ப்பற்றை உணர்த்துகின்றன.
5.2. தமிழலங்காரச் சிறப்பு
வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், தமிழின் உயர்வை விளக்கி மெய்ப்பிக்க, அவர் காலத்தில் (ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்னர்) மக்களிடம் அழுத்தமாகக் கருத்தேற்றம் பெற்றிருந்த தெய்வியக் கதைகளையும், கடவுளர் வாழ்க்கை நிகழ்வுகளையும், பல்வேறு நம்பிக்கைகளையும், மொழிகளின் இலக்கண அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்கேற்ற உத்தியைக் கையாண்டு தமிழின் உயர்வைத் ‘தமிழலங்காரம்’ நூல்வழி நிலைநாட்டி நிறுத்தியிருபதை உணர்ந்திட முடிகின்றது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.

Monday, 13 October 2014

தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்?

ஒரு பூவை எடுத்துக் கொண்டால் கூட உருவத்தையும் அதன் பருவத்தையும் காட்ட பலமொழிகளுக்குச் சொற்பஞ்சம்; தமிழில் அவ்வாறு இல்லை

1. அரும்பு - அரும்பும் நிலை
2. மொட்டு - மொட்டு விடும் நிலை
3. முகை - முகிழ்க்கும் நிலை
4. மலர் - பூ நிலை
5. அலர் - மலர்ந்த நிலை
6. வீ - வாடும் நிலை
7. செம்மல் - இறுதி நிலை

பூவிற்குத்தான் இப்படி பருவப் பெயர்கள் என்றால் இலைகளுக்கும் பல பருவங்களுக்கேற்பத் தமிழ்லி சொற்கள் வருகின்றன

1. கொழுந்து - குழந்தைப் பருவம்
2. தளிர் - இளமைப்பருவம்
3. இலை - காதற்பருவம்
4. பழுப்பு - முதுமைப்பருவம்
5. சருகு - இறுதிப்பருவம்

இந்த இலை என்ற சொல்கூட ஆல், அரசு, அத்தி, பலா, மா, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அறிவியலுக்கும் உகந்த மொழி. தமிழின் வரலாற்றிலேயே அறிவியல் இருந்திருக்கிறது.

தேனைத் தொட்டு நாக்கில் தடவிப்பார்த்தால் அடன் சுவை புரியும். தேன் கூட்டில் இருக்கும் போது அதன் சுவையை எப்படி சுவைக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால் அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் பொருள்படும். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்.


அகத்தியரும் காக்கா கதையும்

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் கவிழ்த்து விட்டது. அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகிறது. ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்து விட்ட அவலத்தைக் பல பாடல்களில் காணலாம்.

நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள் பின்வருமாறு:
சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு, அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார். கடப்பதற்கு அரிய பொதியமலையை அகத்தியர் கடந்ததையே, அகத்தியர் பொதியமலையின் செருக்கை அடக்கினார் என்று ஆரியர் மார் தட்டிக் கொள்கின்றனர்.

ஆணவம், கர்வம், முதலான உணர்வுகள் ஆதிக்க குணம் மிக்கவர்களுக்கு உரியன. மலை எப்படிச் செருக்கு கொள்ளும்?. ஆதிக்க குணம் மிக்க ஆரியர் பொதிய மலையின் கம்பீரத்தைச் ‘செருக்கு’ என நிலை நாட்டினர்.

பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர்.

பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர்.
தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது.


தமிழக மன்னர்கள் ஆதரவும் ஆரியருக்கு முழுமையாகக் கிடைத்தது. மக்களுக்குள் இருந்த, வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் குணமும், அவரது ஒற்றுமைக் குறைவும் ஆரியருக்கு பக்கபலமாயின.

தீயை வளர்த்து அதனை வலம் வந்து மந்திரம் முணுமுணுக்கும் புதியதொரு வழிபாட்டு முறையை அரசியல் செல்வாக்குடன் மக்களிடையே பரப்பினர். இவ்வாறு தெய்வத்தை வணங்குவதற்கு உரியமொழியாகச் சமற்கிருதத்தை உயர்த்திக் கொண்டனர். காலப்போக்கில் சமற்கிருதத்தை ‘தேவபாஷை’ என நிலைநாட்டிக் கொண்டனர்.

நிலையாக நிற்கும் மலை, கடல், ஆறு, இயற்கை, இலக்கியங்கள் அனைத்திலும் சமற்கிருதப் பெயரையும், கருத்துக்களையும் பதிய வைத்தனர். தம் மொழி உருவாக அடிப்படைக் காரணியாக இருந்த தமிழை ‘நீச பாஷை’ என்றும் ‘பைசாச மொழி’ என எள்ளி நகையாடினர்.

வடவரிடம் இருந்து தமிழில் தப்பித்தவை எ, ஒ, ழ, ற, ன என்னும் 5 எழுத்துக்கள் மட்டுமே.
உண்மை இவ்வாறு இருக்க,
“ஐந்து எழுத்தால் ஒருபாடையும் ஆம்என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே “
என கேலி பேசவும் (சுவாமிநாத தேசிகர்-இலக்கணக்கொத்து) செய்தனர்.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பாக்யமேரி)

தமிழ் தாழ்ந்தது – நக்கீரர் கோபம்

ஒருமுறை நக்கீரர் மதுரையில் பட்டி மண்டபத்தில் புலவர்களுடன் வீற்றிருந்த போது அந்த அவையில் குயக்கொண்டான் என்பான் ஒருவன் இருந்தான். அவன் எழுந்து ‘வடமொழியே உயர்ந்தது என்றும் தமிழ் தாழ்ந்தது என்றும் கூறினான். உடனே கோபம் வந்து விட்டது நக்கீரருக்கு. தமிழ் மொழியைத் தம் உயிரினும் மேலாகக் கருதியவர் அவர். தமிழின் தெய்வத்தன்மையும் அதன் பெருமைகளையும் அவரைப்போல அறிந்தவர் யார்?. சினம் தாளாமல்,
“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிய
ஆநந்த வேட்கையான் வேட்கோ குயக்கொண்டான்
ஆநந்தம் சேர்க சிவா ”
என்று பாடினார். உடனே அந்தக் குயக்கொண்டான் வீழ்ந்து இறந்து போனான். அவையே அதிர்ந்து போயிற்று.
அவை நிதானம் அடைவதற்குச் சற்று நேரம் ஆயிற்று. பின்னர் அவையில் உள்ள ஆன்றோர்கள் நக்கீரரைச் சமாதானப்படுத்தினார்கள். “அவன் தமிழை அறிந்தது அவ்வளவுதான். ஏதோ அவனது அறிவின்மையால் உளறிவிட்டான். அதற்காக அவன் இறக்கும்படி பாடியது எங்கள் மனத்தை எல்லாம் பிசைகிறது. எனவே இறக்கும்படி பாடிய நீங்களே அவனை எழுப்பும்படி பாடியருள வேண்டும்.” என்று வேண்டினார்கள்.
அமைதியடைந்த நக்கீரர் உடனே
“ ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தால் காலக்கோள் பட்டானை – சீரிய
அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினால்
செந்தமிழே தீர்க சிவா “
என்று பாடினார். தூங்கியவன் விழித்தெழுந்ததுபோல அவன் எழுந்து கொண்டான்.
எனவே நக்கீரர் ஒருவனைச் சாவவும் வாழவும் வைக்க வல்ல மந்திரத்தமிழில் ஆற்றல் பெற்றவர் என்பது தெரிகிறது.
(நன்றி : திருமுருகாற்றுப்படை – சகுந்தலை நிலையம் வெளியீடு)

தமிழா… பள்ளி எழுந்தருள்வாய்

இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். அதற்கு மந்திரம் என்று பொருள். வடமொழியாளர்கள் குறிப்பிடுவதைப் போல ‘வடவேதமான ரிக் வேதத்தை’ குறிப்பிடுவது அல்ல. நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.

தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.
இருக்கு ரிக் ஆனதற்கு ஓர் எடுத்துக்காட்டு:
மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) பாடல் வரிகள் 25 - 32
“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே”
இதில் வரும் இருக்கொடு என்ற வார்த்தைக்கு வடமொழியாளர்கள் மாணிக்கவாசகர் ரிக் வேதத்தை குறிப்பிட்டார் என்று பொய்யுரை புனைகிறார்கள். ஏன் மாணிக்கவாசகர் யஜுர், சாம அதர்வணத்தை சொல்லவில்லை? பாவம் வடமொழியாளர்கள் அதற்கேற்றார்போல் ஏதாவது தமிழ் வார்த்தை தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? இதில் வடமொழியாளர்களைச் சொல்லிக் குற்றமில்லை! தமிழன், தம் பாட்டன் பூட்டன் சொத்துக்களை அறியாத வரை, மதிக்காத வரை இது தொடரத்தான் செய்யும்.

மேற்கண்ட பாடலின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) வரிகளின் உண்மைப்பொருள் பின்வருமாறு.
(விடியற்காலையில் இறைவனை வழிபடும்போது)
இனிய ஓசையிசைக்கும் வீணையை உடையவர் ஒரு பக்கம்
யாழ் வாசிப்போர் பிறிதொரு பக்கம்
மந்திரங்களோடு துதிப்பாடல்களையும் ஓதுவோர்கள் ஒரு பக்கம்
நெருக்கிக் கட்டப்பட்ட மலர் மாலை ஏந்திய கையினர் ஒரு பக்கம்
தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர் ஒருபக்கம்
தலையிற் கைகுவித்தவர் ஒரு பக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே
(தகுதியற்ற) அடியேனையும் ஆட்கொண்டு இனிய பேரருள் செய்யும் எமது தலைவனே, திருப்படுக்கை விட்டு எழுந்தருள்க.

மனிதர்களை ஏமாற்றுவார்கள். கேள்விப்பட்டுள்ளோம். கடவுளையாவது விட்டு வைக்கக் கூடாதா?
எத்தனை நாள்தான் துயில்வாய் ? தமிழா பள்ளி எழுந்தருள்வாய் !